சென்னை: மக்களவைத் தேர்தல் 2024ல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கான சட்டப் போராட்டம் தொடர்கிறது என்றும் தங்களுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை நிரூபிக்க இம்முறை ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“அதுவும் நானே களத்தில் இறங்கி வெற்றிபெற முடிவெடுத்துள்ளேன். சுயேச்சை சின்னத்தில் களத்தில் இறங்குவதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை.
பாஜகவிற்கு எப்போதும் எங்கள் முழு ஆதரவும் உள்ளது. பாஜக எங்களுக்கு நிறைய தொகுதிகளைக் கொடுக்க முன்வந்தது. ஆனால், இரட்டை இலைச் சின்னம் எங்கள் கைவசம் வராத ஒரே காரணத்தால் மட்டும்தான் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.