சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
வியாழக்கிழமை (மார்ச் 28) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கத்தினர் தங்களது ஆதரவை தி.மு.க. கூட்டணிக்குத் தெரிவித்தனர்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், புதிய திராவிட கழக தலைவர் ராஜ் கவுண்டர், சமூகநீதி மக்கள் கட்சி மாவீரன் பொல்லான், பேரவைத் தலைவர் வடிவேல் ராமன், தென்னக அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கூட்டமைப்பின் மாநில தலைவர் செங்குட்டுவன், கோவில் பூசாரி நலச் சங்க தலைவர் வாசு, தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றச் சங்கத் தலைவர் பரிமளம், தென்னிந்திய விஸ்வ கர்மா முன்னேற்றச் சங்கத்தின் நிறுவன தலைவர் சரவணன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக வீரசேவை முன்னேற்றப் பேரவை, தலைவர் தங்க தமிழ் செல்வன், தமிழ்நாடு தியாகராஜ பாகவதர் எம்.கே.டி. பேரவை மாநிலத் தலைவர் கவிஞர் ரவி பாரதி, எஸ்.ஆர்.எம். மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், சமூக நீதிக் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராசன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதோடு, தி.மு.க. கூட்டணி வெற்றிபெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.
மேலும் பூலித்தேவன் மக்கள் கழகத்தின் தலைவர் எஸ்.பெருமாள்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இவர்களைத் தவிர 16 விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.