சென்னை: தேர்தல் விளம்பரங்களுக்கு முன்னனுமதி வழங்குவதில் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டுவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது.
இம்மாதம் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்கு சேகரிப்பு சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், திமுக அளிக்கும் தேர்தல் விளம்பரங்களுக்கு முன்னனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் ஆறு நாள்கள்வரை காலதாமதம் செய்து வருவதாகவும், நிராகரித்து வருவதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுவும் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான முன்னனுமதி கோரி திமுக அளித்த விண்ணப்பங்கள்மீது அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென அவர் கோரியுள்ளார். இந்த மனு திங்கட்கிழமை (ஏப்ரல் 15) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன்னனுமதி பெற வேண்டும். கட்சிகள் அனுமதி கேட்கும் விளம்பரம் தொடர்பான விண்ணப்பங்களை இரண்டு நாள்களில் பரிசீலித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும்.