புதுடெல்லி: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் மாநிலம் முழுவதும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிவித்துள்ளது.
தமிழகத்துக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மையம் கூறியது.
தமிழகம் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் மதியம் தொடங்கி மாலை வரை வெளியே செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடும் வெயிலுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் ஈரோடு 3ஆம் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் திங்கட்கிழமையன்று அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் புவனேஸ்வர் முதலிடத்தில் உள்ளது.
அங்கும் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலும் 111 டிகிரி வெப்பம் பதிவானது. இவ்விரு நகரங்களுக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இதற்கிடையே, பொதுமக்கள் வெயியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த அறிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.