ஊட்டி: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, மேட்டுப் பாளையம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள பெட்டக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
அங்கு 180 சிசிடிவி கருவிகள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்புப் பணி நடைபெறுகிறது. அத்துடன் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென கண்காணிப்பு கேமரா காட்சிகள் டி.வி. திரையில் தெரியவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முகவர்கள், உடனடியாகத் தொழில்நுட்பப் பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு வழக்கம்போல் கண்காணிப்பு கேமரா காட்சிகள் டி.வி.யில் தெரிய ஆரம்பித்தது.
அதிகமான வெப்பத்தால் மின்சாரக் கோளாறு ஏற்பட்டு சிசிடிவி கருவி செயலிழந்ததாகவும் எவ்வித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என்றும் நீலகிரி ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.