சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து பொது மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய கத்திரி வெயில் காலம் எதிர்வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் கோடைகாலத்தின் போது கத்திரி வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் கத்திரி வெயிலுக்கு முன்பே பல மாவட்டங்களில் 100 டிகிரியைக் கடந்து வெயில் கொளுத்தி வருகிறது.
இந்நிலையில் 25 நாள்களுக்கு மேல் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் மின் தேவை 20,830 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்தே தமிழகத்தின் மொத்த மின்நுகர்வு அதிகரித்து வந்தது. இதனால் குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டிகள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ஆம் தேதி வரை தென்னிந்தியாவில் வெப்ப அலை
இதற்கிடையே தென்னிந்தியாவில் மே 6ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் தெலுங்கானா, கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை கடுமையாக இருக்கக்கூடும்.
கோடையில் சிறப்பு வகுப்புகள் கூடாது
கோடை காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு அறிவிப்பை மீறி வகுப்புகள் நடத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.