கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி தொடங்கியது

கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி தொடங்கியது

2 mins read
84bcbfc3-cb87-41a7-8141-1431057e1279
மலர்க் கண்காட்சியைக் காணத் திரண்ட மக்கள். - படம்: ஊடகம்

கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மலர்க்கண்காட்சிக்கும் கோடை விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

அவ்வகையில் இந்த மாதம் (மே) 17ஆம் தேதி கொடைக்கானலின் 61வது மலர்க் கண்காட்சியும் கோடை விழாவும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த கோடைத் திருவிழாவில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் இந்த மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

நூறாயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண வண்ண மலர்களைக் கொண்டு பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். மேலும் தமிழகத்தில் அரிய மலர்ச்செடி வகைகளும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த மலர்க் கண்காட்சியையும் கோடைவிழா நிகழ்ச்சிகளையும் காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

கொடைக்கானல், ஊட்டி ஆகிய சுற்றுலாத் தலங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் அந்த மலைப்பிரதேச நகரங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் அங்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் மின்னியல் அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) பெறும் நடைமுறை மே 7ஆம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே தெரிவித்து, ‘இ‌-பாஸ்’ பெற்று, அதன் அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்