திருக்கழுக்குன்றம்: இறுதிப் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கொற்றவை தெய்வத்தின் சிற்பம் ஒன்றை, திருக்கழுக்குன்றத்தை அடுத்துள்ள சாத்தமங்கலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் சாத்தமங்கலத்தில் வயல்வெளியில் கல் பலகைச் சிற்பம் ஒன்று இருப்பதாக ஹரிகிருஷ்ணன் என்பவர் கொடுத்த தகவலின்பேரில், வரலாற்று ஆசிரியர் வடிவேல் தலைமையில் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் அங்கு சென்று களஆய்வு மேற்கொண்டனர்.
அந்தச் சிற்பம் குறித்த ஆய்வில், அது இறுதி பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலகைக் கல் சிற்பம் சுமார் 5 அடி உயரமும், 2.5 அடிஅகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேலும், 4 கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை, வலது கரத்தில் மலர் மொட்டும், இடது கரத்திலும் சங்கும், மற்றொரு வலது கரம் மேல்நோக்கி அருள்பாலிக்கும் நிலையிலும், இடது கை கடிஹஸ்த நிலையிலும் உள்ளது.
தலை கரண்ட மகுடம் சூட்டி, சிற்றிடையில் ஆடையணிந்து, எருமை தலை மீது நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் இந்த பட்டியக்கல் சிற்பம், இறுதி பல்லவர் காலமான கிபி 9 அல்லது 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும், மிகவும் பழமையான இந்தக் கல்சிற்பம் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை பெண்தெய்வ சிற்பங்களில் அரிதான ஒன்று என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


