சென்னை: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்னை ரயில்வேயில் பணிபுரியும் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஐஸ்வர்யா எஸ். மேனனுக்கு அழைப்பு வந்துள்ளது.
இதுவரை வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்களை சுமார் இரண்டு லட்சம் மணி நேரம் இயக்கிய அனுபவம் உள்ளவர் ஐஸ்வர்யா.
மத்தியில் மீண்டும் பதவி ஏற்க உள்ள பாஜக கூட்டணியின் புதிய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை (இன்று) பொறுப்பேற்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அழைப்பிதழ் பெற்றவர்களில் ஓட்டுநர் ஐஸ்வர்யாவும் ஒருவர்.
ரயிலை இயக்கும்போது அதற்கான சமிக்ஞைகளை (சிக்னல்) உடனடியாக உள்வாங்குவதில் அபார திறமை பெற்றவர் என ரயில்வே அதிகாரிகள் ஐஸ்வர்யாவைப் பாராட்டுகின்றனர்.
சென்னை-விஜயவாடா, சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில்களை தொடக்க நாள் முதல் இன்றுவரை இயக்கி வரும் ஐஸ்வர்யாவுக்கு உடன் பணியாற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
.

