நீலகிரி: சசிகலாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அந்த தோட்டப்பகுதியில் உரிய அனுமதி இன்றி சில கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு உரிய வரி செலுத்தவில்லை என்றும் விதிமுறைகளை மீறிய புதிய கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஊராட்சி ஒன்றியத் தலைவர் கடந்த 2007ஆம் ஆண்டிலேயே நோட்டீஸ் பிறப்பித்து இருந்தார்.
இதை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கு நீண்ட நாள்களாக நடை பெற்றுவந்த நிலையில் சொத்துவரி விதிப்பது தொடர்பாக கோடநாடு எஸ்டேடில் ஆய்வு நடத்த அனுமதி அளிக்க கோரி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்தில் வாதாடினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு மேற்கொள்ள யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அங்கு சட்ட விரோதமாக கூடுதல் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் என்ன செய்வது என்றும் அரசுதரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சசிகலா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இருதரப்பு வாதங்களுக்குப்பின் கோடநாடு எஸ்டேட்டை முழுமையாக ஆய்வு செய்து சோதனை நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
உரிய விதிமுறைகளைப் பின்பற்றி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், அதிகாரிகள் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.