சென்னை: விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
ஜூன் 14 முதல் 21ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. ஜூன் 24ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். ஜூன் 26ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறலாம்.
ஜூலை 10ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை திமுக அறிவித்து உள்ளது.
திமுக கூட்டணிக் கட்சி சார்பில் திமுக விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவதாக தமிழக முதல்வரும் திமுகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக-திமுக நேரடியாகப் போட்டியிட உள்ளன. பாஜகவும் களம் இறங்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜக நேரடியாகக் களமிறங்காவிட்டால் அதன் கூட்டணிக் கட்சியான பாமக போட்டியிடக்கூடும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
விக்கிரவாண்டித் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி, 71, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

