கீழடி: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வின்போது ‘தா’ என்ற தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. அகழாய்வுப் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இரு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தக் குழிகளில் இருந்து அண்மையில் பாசி, வண்ணக் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் பல பானை ஓடுகள் கிடைத்து வருகின்றன. இவற்றில் பிராமி எனப்படும் தமிழ் முறை எழுத்தில் ‘தா’ என்னும் பண்டைய தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பானை ஓட்டில் ‘தா’ என்ற எழுத்துடன், இரண்டாம் எழுத்து இருப்பதற்கான தடயம் உள்ளதாக கீழடி அகழாய்வுத் தள இயக்குநா் ரமேஷ், இணை இயக்குநா் அஜய் ஆகியோா் தெரிவித்துள்ளனர்.