சென்னை: தஞ்சாவூரில் ரூ.250 கோடியில் குழந்தைகளுக்கான சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை நிறுவப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாவட்டம் தோறும் போதை மீட்பு மையங்கள், முகாம்கள் மூலமாக சமூக அளவிலான விழிப்புணர்வு, ஆலோசனை சேவைகள், போதை மீட்பு சிகிச்சை ஆகியவை வழங்கப்படும் என்றார் அவர்.
மேலும், உரிய மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மட்டுமல்லாமல் சென்னையிலும் அத்தகைய மருத்துவமனை அமைக்கப்படும் என்று அவர் சட்டப்பேரவையில் பேசும்போது குறிப்பிட்டார்.
“சென்னை கிண்டி பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகத்திலும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த மருத்துவமனைகள் அமைய உள்ளன. “மேலும், பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சி, நலத்தை கண்காணிக்க தமிழகம் முழுவதும் சிறப்பு மையங்கள் நடத்தப்படும். அக்குழந்தைகளை அவர்களது இல்லங்களிலேயே வைத்து, தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பதற்கான முன்னோடித் திட்டம் ஒன்று ரூ.1.28 கோடியில் ஏழு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

