சென்னை: அரசின் தரவுத் தளத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கொரோனா காலத்தில், 1.64 லட்சம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை எனத் தணிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த 2020ஆம் ஆண்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
இதனால், கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழந்திருந்தனர். பொருளாதார உதவியாக தலா 2000 முதல் 3000 ரூபாய் என 12.14 லட்சம் தொழிலாளர்களுக்கு 248.29 கோடி ரூபாயை நிதியுதவியாக தமிழக அரசு அறிவித்தது.
அதில், 10.50 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், அரசின் தரவுகளில் உள்ள சிக்கல் காரணமாக, 1.64 லட்சம் பேர் அதாவது 14 விழுக்காட்டுத் தொழிலாளர்களுக்கு கொரோனா கால நிதியுதவி கிடைக்கவில்லை.
மேலும் 1,729 பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நிதியுதவி வழங்கப்பட்டதால், 33.31 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகியிருப்பது தணிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.

