தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணி ஒப்பந்தம் தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் பருவமழையின் போது தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது பல இடங்களில் கால்வாய்களில் குப்பை மண் கழிவுகள் இருந்தன. இதையடுத்து வருகிற பருவமழையின் போது வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் மழை நீர் வடிகால்வாய்களைச் சுத்தப்படுத்தி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் இருந்த சுமார் 400 டன் மண் இதுவரை அகற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தேங்கி இருந்த சுமார் 15 ஆயிரம் கிலோ குப்பைக்கழிவுகள் ஒரே நாளில் அகற்றப்பட்டன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “கடந்த ஆண்டு திடக்கழிவு மேலாண்மை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட போது பெரும்பாலான குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் குப்பைக் கழிவுகளைத் திறந்த வெளியிலும் மழைநீர் வடிகால்வாய்களிலும் வீசிவருகின்றனர். இது தற்போது அதிகரித்து உள்ளது. குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள், ஓட்டல்கள், ரயில், பேருந்து நிலையம், மருத்துவமனை அருகே கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைக்கலாம். இதனால் கால்வாய்களில் குப்பைக்கழிவுகள் வீசப்படுவது குறையும். கால்வாய்களை மூடவேண்டும்,” என்றனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “மழைநீர் தேங்குவதற்கும், வெள்ளப்பெருக்கிற்கும் முக்கியமாக வடிகால்வாய்களில் மண் தேங்கி அடைபடுவதே காரணம். மாநகராட்சி பகுதியில் உள்ள வடிகால்வாய் முழுவதையும் மழைக்கு முன்பே சுத்தப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு முன்னதாகவே கால்வாய்களில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பம்மல், பல்லாவரம், செம்பாக்கம் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார்.

