சென்னை: தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தவும் தரம் உயர்த்தவும் உலக வங்கி ரூ.3,000 கோடி நிதி உதவி வழங்க உள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமெரிக்கா சென்றுள்ளது.
வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கி தலைமை அலுவலகத்தில் அவ்வங்கியின் தெற்காசிய வட்டார துணைத்தலைவர் மார்டின் ரைசர் உள்ளிட்ட அதிகாரிகளை தமிழகக் குழு சந்தித்து ஆலோசனை நடத்தியது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து உலக வங்கி அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதையடுத்து தமிழகம் கோரியுள்ள ரூ.3,000 கோடி நிதியை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக அமெரிக்கா சென்றுள்ள தமிழகக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்து உலக வங்கி குழு ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அதன் பின்னர் தமிழகம் கோரியுள்ள நிதியை எவ்வாறு ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து உலக வங்கி இறுதி முடிவு எடுக்கும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு உலக அளவில் உள்ள நிதி அமைப்புகள் உதவ முன்வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


