கோவை: கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.பி. சண்முகசுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 75.
திமுக முன்னாள் எம்.பி.யான வி.பி. சண்முகசுந்தரம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சனிக்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 98ஆம் ஆண்டு வரை கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம். இவர் திமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
மேலும், கட்சியின் பற்றாளராக விளங்கிய வி.பி.சண்முகசுந்தரம், 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றியவர்.
இளம்வயது முதலே கட்சிப் பற்றாளராக விளங்கிய அவர், கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கட்சி உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதில், திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பி. சண்முகசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

