ராமேசுவரம்: ராமநாதபும் மாவட்டம் ராமேசுவரம் இந்திய அளவில் புனிதத் தலமாகவும், சுற்றுலாப் பகுதியாகவும் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 2.50 கோடி வரை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் அனைவரும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சந்திரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல கோடி மதிப்பீட்டில் 2017ஆம் ஆண்டு முகுந்தராயர் சந்தரம் பகுதியில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இந்தப் பணி தொடங்கும் நிலையில் மீனவர்கள் இந்தப் பகுதியில் மீன் இறங்கு தளம் அமைத்தால் சேதமடைந்து விடும் என மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் கட்டுமானம் தொடங்கி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடந்து கடல் சீற்றத்தின் காரணமாக ‘டி’ வடிவில் அமைக்கப்பட்ட பாலம் ஒரு பகுதி உடைந்து கடலுக்குள் விழுந்து விட்டது. மற்றொரு பகுதி உடைந்து கடலுக்குள் விழும் நிலையில் உள்ளது.
பாலத்தின் சேதமடைந்த பகுதியில் அலைகள் சீற்றத்துடன் மோதி 15 அடி உயரம் வரை மேல் எழும்புகின்றன. சூறாவளிக் காற்று வீசும் நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆட்களை இழுத்துச் செல்லும் அளவிற்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்புகின்றன.
இதன் ஆபத்தை உணராமல் முகுந்தராயர் சத்திரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் பாலத்தில் நடந்து சென்று பார்ப்பதுடன் பெண்கள், குழந்தைகளுடன் சென்று தம்படம் எடுத்துக்கொள்கின்றனர்.
பாலம் உறுதித் தன்மை இல்லாத நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்லுவதால் பாலம் சேதமடைந்து கடலில் விழுந்தால் யாரையும் காப்பாற்ற முடியாது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் எச்சரித்தாலும் அதனை சுற்றுலாப் பயணிகள் பொருட்படுத்துவதில்லை. எனவே சேதமடைந்த பாலத்திற்கு யாரும் செல்ல முடியாத நிலையில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

