சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
கல்வராயன் மலை மேம்பாட்டுத் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் இருப்பதாக தமிழக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கல்வராயன் மலைப்பகுதியில் அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பெயர் பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார். தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியதைப் போல அரசுப் பள்ளிகளிலும் நீக்கிவிடுங்கள். மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்கள் இருக்கலாமா என்று அரசிடம் கேள்வியெழுப்பினார்.
கல்வராயன் மலைப் பகுதிகளை பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அரசுக் குழுவுடன் மூத்த வழக்குரைஞர் தமிழ் மணியும் கல்வராயன் மலைக்கு செல்ல வேண்டும் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

