பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி அருகே அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் மொத்தம் 16 ஆசிரியர்கள் இருந்த நிலையில், தற்போது தொடக்கப்பள்ளிக்கு ஒரு ஆசிரியரும் உயர்நிலைப் பள்ளிக்கு மூன்று ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் கண்டித்தும் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும் வியாழக்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து அண்ணாமலைசேரி-பொன்னேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அத்துடன் அவ்வழியாக வந்த 3 அரசுப் பேருந்துகளையும் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் திருப்பாலைவனம் காவலர்கள் மாணவர்களின் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களது மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

