சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கூடங்களைத் திறப்பதற்கான விதிகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், புதிய விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இனி டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து நூறு மீட்டர் சுற்றளவுக்குள் மதுக்கூடங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுக்கூடங்களின் பரப்பளவு 15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் இட வசதி, கட்டமைப்பு வசதிகளை வழங்க முடியும் என்றும் டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய மாற்றத்திற்குப்பின் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே தொடர்ந்து மதுக்கூடங்களை ஏற்று நடத்தும் பழைய நடைமுறை மாற்றப்படுகிறது.
புதிய நபர்களும் மதுக்கூட ஏலத்தில் பங்கேற்கும் வாய்ப்பு இனிமேல் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் மதுக்கூடங்களை அமைப்பதற்கான விதிகள் தளர்த்தப்பட்டாலும் அத்தகைய கூடங்களில் பீடி, சிகரெட்டுகளை விற்பதற்கான தடை நீடிக்கிறது.

