சென்னை: சபரிமலை, பழனி ஆகிய இரு முக்கிய வழிபாட்டு இடங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக, நிலங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள தமிழக, கேரள அரசுகள் முடிவு செய்துள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில், 30 விழுக்காட்டினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வசதிக்காக, சபரி மலையில் ஐந்து ஏக்கர் நிலத்தைத் தமிழ்நாடு கேட்டுள்ளது. அதற்கு மாற்றாக பழனியில் ஐந்து ஏக்கர் நிலத்தை தமிழ் நாடு வழங்குகிறது என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கண்ணகிக்கு கோவில் கட்டவும், கோவிலுக்கு செல்லும் வழிப் பாதையை செப்பனிடவும் அனுமதி அளிக்க வேண்டும் என, கேரள மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐயப்பன் கோவில் விழாக் காலங்களில், தமிழகத்தில் இருந்து செல்வோருக்கு உதவ, சன்னிதானத்தில் சுழற்சி முறையில் இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

