தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேளாண் துறையில் தமிழகம் முன்னிலை: மு.க. ஸ்டாலின் பெருமிதம்

2 mins read
9e5868f2-376a-4a70-9ddd-3866eff4d4fc
வேளாண் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்தது. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொலை நோக்குத் திட்டமாக முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

“2021-ம் ஆண்டுக்குப் பின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் 29 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு 5,148 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

“கடந்த மூன்றாண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 19.84 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 833.88 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 11.95 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

“விவசாயிகளுக்கு 4,104 டிராக்டர்கள், 10,814 பவர் டில்லர்கள், 332 அறுவடை இயந்திரங்கள், 28,140 பிற விவசாயக் கருவிகள் உட்பட மொத்தம் 43,390 வேளாண் பொறியியல் கருவிகள் ரூ.335.16 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

“முதன் முறையாக ஆதி திராவிடர்-பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“27.5 கோடி ரூபாய் செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, நாகை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பயனடைகின்றனர்.

திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021-2022 முதலாண்டிலேயே உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 11 விழுக்காடாக 11.74 லட்சம் மெட்ரிக் டன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இப்படிப் பல்வேறு திட்டங்களின் மூலம் சிறப்பான முன்னேற்றங்கள் கண்டு பல விருதுகளைப் பெற்றுள்ளது வேளாண்துறை. சென்னை மாநகரின் மையப் பகுதியில் கதீட்ரல் சாலையில் பொது மக்களுக்குப் புத்துணர்வை அளிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்பூங்கா தமிழ்நாட்டிற்கே ஒரு புதிய அணிகலனாக விளங்கி அனைவரையும் கவர்ந்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று அந்த அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்