சென்னை: அரசியலில் நுழைந்து மக்களுக்குச் சேவையாற்ற முடியும் எனத் தன் மகன் உறுதியாக நம்பியதாகவும் அந்த நம்பிக்கைக்கு தமிழக மக்கள் உயிர் கொடுத்திருப்பதாகவும் தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தவெகவின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் தமிழக முதல்வராக மக்கள் ஆதரவோடு பொறுப்பேற்க முடியும் என விஜய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நம்பிக்கையோடு களமிறங்கியதாகக் குறிப்பிட்டார்.
விஜய்யிடம் காணப்பட்ட நம்பிக்கை தம்மை அசர வைத்ததாகத் தெரிவித்த அவர், ஒரு தந்தையாக, அவருக்குக் கிடைத்த இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
“இதைவிட ஒரு தந்தைக்கு வேறென்ன வேண்டும். வாக்குகள் எண்ணப்படும்போது திருத்தணிக்குச் செல்ல விரும்பினேன். அதேபோல் எல்லாம் நல்லபடியாக நடந்தது.
“வாக்களித்த பலரும் ‘விஜய் அண்ணாவுக்கு வாக்களித்தோம்’ என்று என்னிடம் தெரிவித்தனர். யாரும் விஜய்யைத் தங்கள் தலைவர் என்று சொல்லவில்லை. அவரும் தன்னைத் தலைவன் எனச் சொல்லிக்கொண்டதில்லை. ‘அண்ணன்’ என்ற உறவுதான் மக்களுக்கும் அவருக்குமான நெருக்கத்தை அதிகரித்துள்ளது.
“120 தொகுதிகளில் தவெக வெற்றிபெறும் என நினைத்தேன். கூட்டணி அமைத்து போட்டியிடலாமே என்று பலரும் விஜய்யிடம் கேட்டனர். ஆனால், தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால்தான் மக்களுக்காக நிம்மதியாக, நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என அவர் நம்பினார்,” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

