சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையைச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) வெளியிட்டது. இந்நிலையில், அதை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
“தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது. ஆனால், தனது நிர்வாகத் திறமையின்மையாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் தவெக தடுமாறுவதை இது காட்டுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
அதிகரித்த கடன்
வெள்ளை அறிக்கையில், அரசின் கடன் ரூ.13 லட்சம் கோடியாக (176.5 பில்லியன் வெள்ளி) உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்சம் (1,735 வெள்ளி) கடன் சுமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
“கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்தாண்டுக் காலக் கட்டமே இந்த வெள்ளை அறிக்கையின் மையப் பகுப்பாய்வுக் காலமாகும். பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்சிக் காலத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களின் நிதி நிலையைச் சீரமைத்துள்ள நிலையில், தமிழகத்தின் வளர்ச்சிக் குறியீடுகள் எதிர்த் திசையிலேயே நகர்ந்துள்ளன.
“தமிழகத்தில் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலச் சொத்து வரி வருவாய் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தற்போதைய நுகர்வுச் செலவுகளை ஈடுகட்டவே மாநிலம் கடன் பெற்றுள்ளது.
“தமிழகத்தின் நிலுவையில் உள்ள கடன் பொறுப்புகள், கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டு வட்டிச் சுமையும் ரூ.67,050 கோடியாக உயர்ந்துள்ளது.
“மின்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது. போக்குவரத்துத் துறையில் ஒரு கிலோமீட்டருக்கான செலவு ரூ.78.81 ஆகவும் வருவாய் ரூ.25.97 ஆகவும் உள்ளது. அதன்படி, போக்குவரத்துத் துறையில் ரூ.72,667 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த 2021-2026ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டிருந்தது. இந்த ஐந்தாண்டு கால கடன், மாநிலம் தனது முதல் 60 ஆண்டுக் காலத்தில் பெற்ற கடனை விட அதிகமாகும்.
“இந்த இக்கட்டான சூழலிலிருந்து மீள, வருவாய் திரட்டுவதை அதிகரித்தல், செலவினங்களை முறைப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களில் சீர்திருத்தம், ஊழலற்ற நிர்வாகம் அவசியம்,” என்று வெள்ளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

