தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொடுங்கையூரில் திறப்புவிழா கண்ட தவெகவின் ‘விலையில்லா விருந்தகம்’

2 mins read
60336397-3bf8-4d06-80cb-a873386b5eb7
தவெகவின் விலையில்லா விருந்தகம் பற்றிய விளம்பரச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்யை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்து, ஆட்சியில் அமர வைப்போம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உறுதி தெரிவித்துள்ளார்.

வடசென்னை மாவட்டம் சார்பில் கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் தவெகவின் 33வது விலையில்லா விருந்தகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் திறந்து வைத்தார்.

ஏற்கெனவே மாநிலம் முழுவதும் 32 இடங்களில் தவெகவின் விலையில்லா விருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலையில் ஏறக்குறைய 200 பேருக்கு இட்லி, வடை, பொங்கல் உள்ளிட்ட சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது.

சில இடங்களில் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) நடைபெற்ற விலையில்லா விருந்தகத்தின் திறப்பு விழாவில் தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கான மிதிவண்டி, 200 பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வடசென்னை மாவட்டச் செயலாளர் சிவா பேசினார்.

“தினந்தோறும் மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்துகொண்டு இருக்கும் ஒரே கட்சி தவெகதான். ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என வடிவங்கள் மாறினாலும் தொடர்ந்து கடந்த 31 ஆண்டுகளாக மக்களோடு மக்களாக நின்று உழைத்து, உதவிகளை வழங்கி வருகிறோம்.

“கொடுங்கையூரில் 33வது விலையில்லா விருந்தகம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 397 இடங்களில் விலையில்லா முட்டை, ரொட்டி, பால் வழங்கும் திட்டத்தையும் நடத்தி வருகிறோம்.

“குருதியகம், விழியகம், பயிலகம், நூலகம், சட்ட ஆலோசனை மையம், தளபதி விலையில்லா வீடு கட்டும் திட்டம் என தவெக சார்பில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அவர் பேசினார்.

குறிப்புச் சொற்கள்