சென்னை: தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு தூண்களை அமைப்பதில் ரூ.45 லட்சத்துக்கு முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தச் சிலைகளுக்கான அதிகாரபூர்வ ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் முடிவடையும் முன்னரே, பணிகள் அனைத்தும் அவசர அவசரமாக முடிக்கப்பட்டு சிலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
ஏறக்குறைய ரூ.45 லட்சம் மதிப்பிலான இந்தப் பணிகளில், உரிய போட்டி ஏல நடைமுறைகள் பின்பற்றப்படாமல், முன்கூட்டியே ஒப்பந்ததாரர்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்தது.
அவசரகால நிவாரணப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி சட்டங்களில் சில விலக்குகள் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், நகர்ப்புற அழகுபடுத்துதல் பணிக்கு ஏன் இத்தகைய சலுகை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் சட்டப்படி வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்றும் அவை கோரப்பட்டு நடைமுறைகள் முடிந்த பிறகுதான் பணிகள் நடைபெற வேண்டும் என்பதை அமைச்சர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
“ஏறக்குறைய ரூ.45 லட்சத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை முன்கூட்டியே தீர்மானித்து, ஒப்பந்ததாரருடன் கூட்டுச்சதி செய்து, சிலைகளை ஏற்கெனவே நிறுவ வைத்திருக்கிறார்கள்.
“இப்போது அவர்களுக்குப் பணம் வழங்குவதற்காக ஒப்பந்தப்புள்ளி என்று ஒன்றைப் போட்டு, போட்டி இருப்பதுபோல கணக்குக் காட்டியிருக்கலாம். யாராவது ஒரு போலி ஒப்பந்ததாரரைக்கூட விண்ணப்பிக்க வைத்திருக்கலாம்,” என்றும் அறப்போர் இயக்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தப்புள்ளி முறைகேடு குறித்து தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை அறப்போர் தொடரும் என்றும் அந்த இயக்கம் எச்சரித்துள்ளது.
