விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.
இங்கு இதுவரை தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, வட்டச் சில்லு, தங்க மணி, சூது பவள மணி, கண்ணாடி மணிகள், மண்பாண்டப் பாத்திரங்கள், மண்குடுவை என 3,250க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், கூடுதலாக சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ பொம்மையின் கால் பகுதி, சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது.
சிறுவர்கள் விளையாடுவதற்குப் பயன்படுத்தும் சிறிய அளவிலான மண்குடுவையும் வெள்ளை நிறச் சங்கு வளையலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்துக் கூறிய அகழாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர், “தொல்பொருள்களை ஆவணப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
“நம் முன்னோர்கள் இப்பகுதியில் வசித்து தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் இந்த அகழாய்வில் கிடைத்து வருகின்றது. குறிப்பாக அதிகமான சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
“சிறுவர்கள் விளையாடுவதற்காகச் சிறிய அளவிலான விளையாட்டுப் பொருள்களையும் முன்னோர்கள் உருவாக்கியது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது,” என்றார்.
மேலும், அகழாய்வு முழுமையாக முடிவடைந்த எட்டுக் குழிகள் மூடப்பட்டுள்ளன. விரைவில் கூடுதலாக அகழாய்வுக் குழிகள் தோண்டப்படும். அவற்றில் மேலும் பல பொருள்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் பொன் பாஸ்கர்.