சென்னை: அளவில்லா அன்பு பொழிந்த தமிழ் வம்சாவளியினரின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தமிழகம் திரும்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்னையிலிருந்து ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்ற அவர், திங்கட்கிழமை (செப்டம்பர் 8) அதிகாலை தாயகம் திரும்பியிருக்கிறார்.
அப்பயணத்தின்போது வெவ்வேறு தொழில் நிறுவன நிர்வாகிகள், புலம் பெயர்ந்த தமிழர்கள், அந்தந்த நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து அவர் பேசினார்.
இந்துஜா குழுமம் உள்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனைகளை நடத்தி முதலீடுகளை ஈா்த்த முதல்வர், இரு நாடுகளிலும் மேற்கொண்ட பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமது பயண நிறைவை குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டனில் அவர்கள் வாழ்த்துக்களுடன் நிறைவுபெறுகிறது. எல்லையில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்,” எனக் கூறியுள்ளார்.
மேலும், இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னைக் கவனித்துக்கொண்ட தமிழ் வம்சாவளியினருக்கு என் அன்பை நன்றியாய் தெரிவித்துக்கொள்கிறேன்!” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, லண்டனிலிருந்து சென்னை புறப்படுவதற்கு முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.