சென்னை: தவெக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், முரண்பட்ட தகவலைக் குறிப்பிட்டதால் அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்.
முதலில் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீது எந்த வழக்கும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீது 2025ல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் அளித்துள்ள வேட்புமனுக்களில் முரண்பட்ட தகவல் இருப்பது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக, அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் வரும் 6ஆம் தேதிதான் முடிவடைகிறது என்பதால் அதற்குள் புதிய, திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை விஜய் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 7ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். அதன் பிறகே விஜய்யின் மனுக்கள் ஏற்கப்படுமா என்பது தெரியவரும்.

