சென்னை: தம் மனைவி சங்கீதா குறித்து தவெக தொண்டர்கள் சமூக ஊடகங்களில் இழிவுபடுத்தியும் ஆபாசமாகவும் பதிவிடுவதை நடிகர் விஜய் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது.
மனவிலக்கு என்பது ஒரு சட்ட நடைமுறை என்றும் அதுகுறித்து சமூக ஊடகங்கள் ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் விஜய்யின் பெயரைச் சொல்லிக் கொண்டு இயங்கும் தவெக தொண்டர்கள் சமூக ஊடகங்களில் சங்கீதாவைக் குறிவைத்து, ஆபாசமான, இழிவான பதிவுகள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர் என்றும் மாதர் சங்கம் சாடியுள்ளது.
இவ்வாறு செய்வது கருத்துச் சுதந்திரமன்றும் என்றும் பெண்களுக்கு எதிரான மின்னிலக்க வன்முறை என்றும் வருணித்துள்ள மாதர் சங்கம், பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுச் சொத்தன்று என்றும் கூறியுள்ளது.
“எனவே, ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்க, சமூக ஊடக வன்முறையை வெளிப்படையாகவும் தெளிவாகவும் கண்டிக்க வேண்டும். இது ஒரு அரசியல் கட்சி தலைவரின் அரசியல் – சமூக பொறுப்பு. இத்தகைய சமூக ஊடக வன்முறைக்கு மௌனம் காப்பதும் குற்றத்திற்குச் சமமானதாகும்.
“ஒரு பெண் தனது திருமண வாழ்க்கை தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அப்பெண்ணை அவமதிக்கவோ, கேலி செய்யவோ, பாலியல் இழிவுக்கு உள்ளாக்கவோ யாருக்கும் உரிமை இல்லை,” என்று மாதர் சங்கம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

