சென்னை: அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி. பாலமுருகன், தனது தொகுதியில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது எளிமையான அணுகுமுறை தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வேட்புமனு தாக்கலை முடித்த கையோடு களத்தில் குதித்துள்ள பாலமுருகன், தினமும் காலையில் தொகுதியிலுள்ள முக்கியப் பூங்காக்களுக்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அங்குள்ள தாங்கல் பூங்கா, புதூர் மீன் சந்தை, மாதனாங்குப்பம், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று தனது ‘விசில்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின் ஒரு பகுதியாகக் கள்ளிக்குப்பம் பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு டீக்கடைக்கு வேட்பாளர் பாலமுருகன் திடீரென சென்றார். யாரும் எதிர்பாராத விதமாக, அவரே தேநீர் தயாரித்து, அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார்.
வாடிக்கையாளர்களுடன் இயல்பாகப் பேசிக்கொண்டே அவர் வாக்கு சேகரித்த விதம், அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இத்தகைய நூதனப் பிரசார முறைகள் மூலம் அம்பத்தூர் தொகுதியில் பாலமுருகன் கவனம் ஈர்த்து வருகிறார்.

