பிப்ரவரி 6 முதல் தவெக விருப்ப மனு விநியோகம்

பிப்ரவரி 6 முதல் தவெக விருப்ப மனு விநியோகம்

2 mins read
924c347a-a97c-4962-94b7-e90baa3cdec4
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். - படம்: தமிழ் முரசு
Google News Preferred Icon

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனுக்களைப் பிப்ரவரி 14ஆம் தேதி வரை தவெக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தவெகவின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் செய்திக் குறிப்பு வெளியிட்டார்.

“தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது.

“இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

“அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நம் வெற்றித் தலைவரின் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.

“இதற்கான விருப்ப மனுக்கள், வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 14ஆம் தேதி சனிக்கிழமை வரை தவெக தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.

“பிப்ரவரி 6ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதர நாள்களில் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

“விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். இதைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவரின் ஆணைக்கிணங்க, தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
தவெகதேர்தல்விண்ணப்பம்