சென்னை: பெண்களைப் பற்றி மிகக் கொச்சையாகப் பதிவிடும் தவெகவினரை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துத் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) சட்டமன்றத்தில் பேசிய அவர், பெண்கள் குறித்துத் தவறாகப் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் கூறிய கருத்தைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
பெண் தலைவர்கள், பெண்களைப் பற்றிச் சமூக வலைதளங்களில் மிக மிகக் கொச்சையாகவும் தவறாகவும் பதிவு செய்பவர்களில் தவெகவினரும் உள்ளனர் என்றும் அவர்களையும் முதல்வர் நிச்சயம் கண்டிக்க வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தவெகவில் யார் தவறாகப் பேசினாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஒருசிலர் தங்கள் கட்சிப் பெயரில் சமூக ஊடகங்களில் போலிப் பக்கங்களை உருவாக்கி அவதூறு பரப்புவதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவினர் தொடர்ந்து இதுபோல் செய்துகொண்டிருப்பதாகச் சாடினார்.
காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு என்னென்ன சங்கடங்களை ஏற்படுத்தினார்களோ, அதைத்தான் தங்களுக்கும் செய்கிறார்கள் என்றார் அமைச்சர் நிர்மல் குமார்.


