புதுடெல்லி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காமல் தாமதிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெகவைச் சேர்ந்த கே எழிலரசி என்பவர் தாம் ஒரு வழக்கறிஞர் என்று கூறி அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
“தேர்தலுக்கு முந்தைய எந்தவொரு கூட்டணியும் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், தனிப்பெரும் கட்சியாகத் திகழும் தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்; பின்னர், அக்கட்சி அவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
“ஆளுநரிடம் அளிக்கப்படும் எந்தவொரு கடிதமோ பிரமாணப் பத்திரமோ அல்லது ஆதரவு ஆவணமோ சட்டமன்ற அவையில் நடைபெறும் வாக்கெடுப்பிற்கு ஈடாகாது,” என எழிலரசி தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் எஸ்ஆர் பொம்மை ஆட்சி அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பைச் சுட்டிக் காட்டியுள்ள அவர், “ஆட்சி அமைக்க அழைப்பு விடுமுன்னரே பெரும்பான்மைக்கான முழுமையான ஆதாரங்களைக் கோருவது ஆளுநரின் கடமை அல்ல,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் உச்ச நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் அந்த மனு இன்னும் இடம்பெறவில்லை.

