சென்னை: அரசியல் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறிவைக்கப்பட்டிருப்பதாக அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சிதறடிக்க விசிகவை கருவியாகப் பயன்படுத்தும் வகையில் சதி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி திமுக தலைமையிலான ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்’ இடம்பெற்றிருப்பது முதன்மையான காரணமாகும். இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர்,” என்று தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், தனது கட்சி மாநாட்டில், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ எனக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், இதே கோரிக்கையை விசிக முன்வைத்ததால் தங்களைக் குறி வைத்துத்தான் விஜய் அவ்வாறு பேசியதாக அரசியல் வட்டாரத்தில் உரத்த உரையாடல்கள் நடந்ததாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே, வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நூல் வெளியீட்டு விழா ஒன்றில், திருமாவளவனும் விஜய்யும் பங்கேற்க உள்ளனர். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.