சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 30) தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்துப் பேசினார்.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நடிகர் விஜய், ஆளுநரைச் சந்தித்தது இதுவே முதன்முறை.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்குப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆளுநரிடம் விஜய் மனு அளித்தார்.
இச்சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் பொருளாளர் வெங்கட்ராமனும் உடனிருந்தனர்.
இச்சந்திப்பு தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள புஸ்ஸி ஆனந்த், “தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
“தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழையாலும் ஃபெஞ்சல் புயலாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இவ்விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
தங்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார் என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பின்போது ஆளுநர் ரவிக்கு தவெக தலைவர் விஜய் ‘திருக்குறள்’ புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். பதிலுக்கு ‘பாரதியார் கவிதைகள்’ தொகுப்பை விஜய்க்கு ஆளுநர் ரவி பரிசாக அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
‘பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்’
இதனிடையே, “எல்லாச் சூழல்களிலும், அண்ணனாகவும் அரணாகவும் உங்களுடன் உறுதியாக நிற்பேன்,” என்று தமிழகப் பெண்களுக்குத் திறந்த மடல் ஒன்றை விஜய் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்குச் சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
“யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே.
“எனவே, எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தமிழகத்தை உலுக்கிய நிலையில், விஜய் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

