கரூர்: விஜய் முதல்வர் ஆகியுள்ளது குறித்து, கடந்த ஆண்டு கரூரில் 41 உயிர்களைப் பறிகொடுத்த குடும்பத்தினர் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
அது தொடர்பாக சிலருடைய குடும்பங்களை பிபிசி நேரில் சந்தித்துப் பேசியது.
“வேலுசாமிபுரம் பகுதியில் எங்குமே தவெகவினரின் கொண்டாட்டங்களைப் பார்க்க முடியவில்லை. ஓரிடத்தில் மட்டும் நன்றி தெரிவிக்கும் பதாகை தென்பட்டது” என்றது பிபிசி.
சம்பவத்துக்குப் பின்பு மாமல்லபுரத்தில் தங்களை விஜய் சந்தித்துப் பேசியபோது, அவரின் மனிதாபிமானம் வெளிப்பட்டதாகக் கூறினார் ஒன்றரை வயதுக் குழந்தையை இழந்த விமல்.
‘’நாற்காலியில் அமர்ந்திருந்த எனது மனைவியின் காலைப் பிடித்து, தன்னை மன்னிக்குமாறு விஜய் மண்டியிட்டுக் கோரியபோது எனது மனைவி உட்பட எல்லாருமே அழுதுவிட்டோம்,’’ என்றார் விமல்.
கூட்ட நெரிசலில் ஏமூர் பகுதியில் மட்டுமே பலர் உயிரிழந்திருந்தனர். ஆனந்த் ஜோதி என்பவருடைய மனைவியும் இரு மகள்களும் உயிரிழந்துவிட்டனர். பிபிசியிடம் பேசிய ஆனந்த் ஜோதி, “இப்போதுதான் துயரிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறோம். அதனால் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை,’’ என்றார்.
வேலுசாமிபுரம் அருகிலுள்ள கோதூர் சாலையில் வசிக்கிறது பெருமாள்–செல்வராணி குடும்பம்.
“பல வேதனைகள் இருந்தாலும், விஜய் முதல்வரானதில் எங்களைப் போன்றவர்களுக்கு திருப்தி. மற்றபடி 41 பேர் உயிரிழப்புக்கு யார் காரணம் என்பதை சிபிஐ கண்டுபிடிக்கட்டும்,’’ என்றார் கூட்ட நெரிசலில் இரு மகள்களை இழந்த பெருமாள்.

