சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்காகக் கொள்கைப் பாடலை எழுதி, இசைமையத்துப் பாடியிருக்கிறார் அறிவு. அவருக்கு தவெக தலைவர் விஜய் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
‘கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கட்சித் தலைவர் விஜய் கொடி ஏற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பின்னர் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இந்த மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கைப் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்தப் பாடலை எழுதியது யார், பாடியது யார் என்ற கேள்வி எழுந்தது. இப்போது அந்தப் பாடலை எழுதி, இசையமைத்து பாடியவர் அறிவு என்பது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக அறிவு தனது இன்ஸ்டகிராம் பதிவில் “நான் அவரிடம், என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று கேட்டேன். “உன்னால் மட்டுமே முடியும்!” என்றார்.
“தவெக கட்சியின் கொள்கைப் பாடலை இயற்றி, இசையமைக்க என்னை நம்பியதற்கு நன்றி விஜய் சார். உங்கள் குரலைப் பதிவு செய்தது என் வாழ்வின் மிகப்பெரிய நினைவாக இருக்கும். உங்கள் அரசியல் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். மிக்க நன்றி சார்,” என்று தெரிவித்துள்ளார்.