சென்னை: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தொழில்துறை அமைச்சர், முதல்வர் விஜய் ஆகியோர் அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
தென்மாநிலங்களுக்கு இடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், ஏற்கெனவே பெற்றுள்ள இடத்தைத் தக்கவைக்க தமிழக அரசு பல்வேறு முக்கியத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
எதிர்வரும் நாள்களில் தைவானில் நடைபெறவுள்ள ‘செமிகான்’ அனைத்துலக மாநாட்டில் பங்கேற்க தொழில்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
இம்மாநாட்டில் பகுதி மின்கடத்தி, செயற்கை நுண்ணறிவு, சில்லு தயாரிப்பு நிறுவனங்களின் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.
இப்பயணத்தின்போது பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து, மாநிலத்தில் உள்ள கட்டமைப்பு வசதிகள், தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.


