சென்னை: அறுபது வயது வரையுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு ஆறு இலவச காஸ் சிலிண்டர்கள், ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அளித்துள்ளார்.
தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தவெக தேர்தல் அறிக்கையை வியாழக்கிழமை (ஏப்ரல் 16) வெளியிட்டுப் பேசிய விஜய், திருக்குறள் கூறிய அறம், பொருள், இன்பத்தை அடிப்படையாக வைத்து தேர்தல் வாக்குறுதிகள் இருக்கும் என்றார்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பல முக்கியத் திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார்.
கல்வி மேம்பாட்டுக்கு பல திட்டங்கள்
பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2,500 வேலையில்லா கால நிவாரணம், இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை 20 லட்சம் வட்டியில்லாக் கல்வி கடன், ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை தரமான கல்வியை வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள், ஒவ்வொரு பள்ளியிலும் நவீன உள்கட்டமைப்பு, உலகத் தரம் வாய்ந்த கல்வி போன்று கல்வி மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் இடம்பெற்றன.
தற்காலிகப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள், தாதியர்களுக்கு பணி நிரந்தரம், காவல்துறையினரின் அடிப்படை ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு, ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.30,000 உதவித்தொகை, கைத்தறி, விசைத்தறிகளுக்கு முறையே 500 மற்றும் 1,500 யூனிட் இலவச மின்சாரம் என்று ஒவ்வொரு சமூகத் தலைப்புகளிலும் 10 அம்சங்களில் வாக்குறுதிகளை அளித்தார் விஜய்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்சம் வரையிலான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், மலிவு விலை மருந்துகள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட்டு கட்டணமில்லா மின்சாரம்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்தியேகப் பெருந்திட்டம் உருவாக்கப்படும். தமிழ்நாட்டை இந்தியாவின் ஏஐ நகரமாக மாற்றிக் காட்டுவோம். அரசுத் திட்டங்கள், ரேஷன் உள்ளிட்டவை வீட்டுக்கே வந்து சேரும். பொது மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க சட்டமன்றத்தில் சிறப்பு நாள். 21 நாள்களுக்குள் வணிக உரிம உத்தரவாதம்.
இப்படி பல்வேறு நலத்திட்ட வாக்குறுதிகளை அளித்த விஜய் மக்கள் அனைவரும் என்னை நம்பலாம். நான் பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றமாட்டேன் என்று உறுதியளித்து வணங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
விவசாயி அறிக்கையை வெளியிட்டார்
நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற விழாவில், அனுமதிச் சீட்டு வழங்கப்பட்ட 800 கழக நிர்வாகிகள் மட்டுமே பங்கு பெற்றனர்
அறிக்கை மலரை விவசாயி நாராயணன் வெளியிட, ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர் , துப்புரவுப் பணியாளர்,நெசவாளர், மீனவர், மூன்றாம் பாலினத்தவர் பெற்றுக்கொண்டனர்.
ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடுகிறது.

