விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

1 mins read
97496c59-ec60-49fc-af9f-59663ce18846
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு. - படம்: தமிழக ஊடகம்

விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவைப் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலராகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், உதவிகள் வழங்காமலும், அடையாள அட்டை வழங்கும் முகாம்களைச் சரிவர நடத்தாமலும் தங்கவேல், மெத்தனப் போக்குடன் இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருக்குத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சென்றன.

இதையடுத்து தங்கவேலின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் பழனிக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கடிதம் அனுப்பியிருந்தார்.

மாவட்ட ஆட்சியர் பழனி நடத்திய விசாரணையில் மேற்கண்ட புகார்கள் அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்தது. அது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருக்குக் கடிதம் மூலம் அனுப்பினார். இதையடுத்து தங்கவேலுவைப் பணியிடை நீக்கம் செய்தார் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லட்சுமி.

மேலும், உரிய அனுமதி இல்லாமல் தலைமையிடமான விழுப்புரத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்