சிவகங்கை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பர் மாதமே மக்கள் பார்வைக்குத் திறக்கப்படும் என்றும் தமது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் கீழடி அருங்காட்சியகத்தை அவர் நேரில் பார்வையிட்டார்.
கீழடி அருங்காட்சியகத்தில் சுமார் 13,000 தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ரசித்துப் பார்த்த திரு ஸ்டாலின், அங்கு வந்த பார்வையாளர்கள் சிலருடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டார்.
“கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமோர் அருங்காட்சியகம் எழுந்து வருகிறது. பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன. நிலத்திலும் நீரிலும் இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்தில் இருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பது உறுதிசெய்யப்பட்டு வருகிறது,” என்று முதல்வர் ஸ்டாலின் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்ற அகழாய்வின்போது நூற்றுக்கணக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை வருங்கால சந்ததியினர், மாணவ, மாணவியர், அறிஞர்கள், தொல்லியல் வல்லுநர்கள், அயல்நாட்டு வல்லுநர்கள் என அனைவரும் அறியும் வகையில் காட்சிப்படுத்திட ஏதுவாக, அங்கு உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
“திறந்து வைக்கப்பட்ட 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம்.
“வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்கு சென்றபோது அறிந்துகொண்டேன். கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.