சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 62 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்றும் முதலில் 8.15 லட்சம் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகே, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மொத்தம் 3.60 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்று தெரிவித்துள்ள அவர், வாக்காளர்களாகப் பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 லட்சம் அலுவலர்கள் (80%) அஞ்சல் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்கள், மற்ற தேர்தல் பிரிவுகளில் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்புக் குழுக்களில் பணியாற்றிய அலுவலர்கள் என மொத்தம் 3.36 லட்சம் பேர் தபால் வாக்குகளாகவும் 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும் வாக்களித்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்படும் அனைத்து மையங்களிலும் ஒரு பகுதியில் அஞ்சல் வாக்குகளும் மற்றொரு பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என்று கூறியுள்ள அவர், இந்தப் பணியை மேற்பார்வையிட உதவித் தேர்தல் அலுவலர் நிலையில் உள்ள அதிகாரிகள் தனித்தனியே நியமிக்கப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு மேசைக்கு 500 வாக்குகள் என்ற விகிதத்தில் காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8.30 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெறும். எனினும், இதன் கடைசிச் சுற்று வாக்கு எண்ணும் பணி, அஞ்சல் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகுதான் தொடங்கும்,” என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

