சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 4 நாள்கள் நடைபெற்றன.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் மொத்தம் 89,256 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 18 வயது நிரம்பிய இளம் வயதினர் மட்டும் 58,374 பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்ப்பதற்கான படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். இவர்கள் 18 வயது நிரம்பியதற்கான வயதுச் சான்றுடன் விண்ணப்பித்தனர்.
பெரம்பூர் தொகுதியில்தான் அதிகபட்சமாக 6,097 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்ததாக ஆர்.கே.நகர் தொகுதியில் 5,227 பேரும் திரு.வி.க. நகர் தொகுதியில் 5,306 பேரும் மனு கொடுத்துள்ளனர்.
வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்வதற்கு 29,501 பேர் மனு கொடுத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 1,371 பெயரை நீக்கம் செய்யவும் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தொகுதியாக பெரம்பூர் தொகுதி உள்ளது. அங்கு 9,013 படிவங்கள் பெறப்பட்டன. அடுத்ததாக கொளத்தூரில் 8,422 படிவங்களும் மூன்றாவதாக ஆர்.கே.நகர் தொகுதியில் 7,737 படிவங்களும் பெறப்பட்டன.
சிறப்பு முகாம்கள் முடிந்தாலும்கூட இன்று முதல் 28ஆம் தேதி வரை மேலும் 4 நாள்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படுகின்றன.