சென்னை: மக்களுக்காக தமிழக அரசுடன் தேமுதிக இணைந்து செயல்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளையொட்டி, சென்னையில் செய்தியாளர்களின் பேசிய அவர், தமிழகம் முழுவதும் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது தேமுதிக. இந்நிலையில், தமிழக அரசின் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் பிரேமலதா.
இதனால் தேமுதிக அடுத்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இணையும் எனத் தகவல் பரவியது.
இந்நிலையில், தனது அறிக்கை குறித்து பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.
தேமுதிகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு அம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றதால் அதை தேமுதிக வரவேற்றது என்றும் இதற்கு அரசியல் காரணங்கள் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
“நல்லது நடந்தால் ஆதரிக்கிறோம். தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டுகிறோம். மும்மொழிக் கொள்கையைப் பொருத்தவரை தாய்மொழி காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம் என்று விஜயகாந்த் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
“தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் ஒரு தொகுதியை மத்திய அரசு குறைத்தால்கூட மக்களுக்காக தமிழக அரசுடன் இணைந்து அதை எதிர்ப்போம்.
தொடர்புடைய செய்திகள்
“தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அடுத்த ஆண்டு பிறந்த நாளில் கூட்டணி குறித்து உறுதியாக அறிவிக்கிறேன்,” என்றார் பிரேமலதா.
கூட்டணி குறித்து அவர் தெரிவித்துள்ள இக்கருத்து, அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.