சென்னை: பெண்களுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதால் சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் அமோக ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்த்த திமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நடந்து முடிந்த தேர்தலில் பெண்கள் பேரளவில் வாக்களித்துள்ளனர். எனவே, பெண்களுக்காகச் செயல்படுத்திய திட்டங்கள் வாக்குகளைப் பெற்றுத்தரும் என திமுக தலைமை உறுதியாக நம்பியது.
கடந்த 2021ல் ஆட்சியைப் பிடித்த திமுக, அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டத்தை அறிவித்தது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் வழங்கிய 2,755 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.
‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை’யை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை அறிவித்தபோது பெரும் வரவேற்பு கிடைத்தது.
அப்போதே 2026 தேர்தலுக்கான திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக திமுகவினர் பேசத் தொடங்கினர்.
அதன் பின்னர் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்காகப் புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் மகளிர் தங்குவதற்கான ‘தோழி’ விடுதி, நான் முதல்வர் உள்ளிட்ட திட்டங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிற்குப் பெண்கள் அதிக அளவில் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 12 தவிர, மற்ற தொகுதிகள் அனைத்திலும் ஆண்களைவிட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.
பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும் என்று திமுக நம்பிய நிலையில், தேர்தல் கள நிலவரமோ முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

