சென்னை: சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் முரளிதர மகாலி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தயாநிதி மாறன், வில்சன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை விமான நிலைய உள்கட்டமைப்புகாக ரூ.236 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சென்னை விமான நிலையத்தில் விமானங்களுக்கான நேர ஒதுக்கீட்டில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் பயணிகள் போக்குவரத்து அடிப்படையில், சென்னை விமான நிலையம் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னர் 3.5 கோடி பயணிகளைக் கையாளும் திறன்கொண்டதாக அது வளர்ச்சி பெறும் என்றும் அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக திரு முரளிதர மகாலி தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடி செலவில் புதிதாகக் கட்டப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்துக்கான கட்டுமானப் பணி ஏறக்குறைய 76 விழுக்காடு முடிந்துவிட்டதாகக் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி ரூ.51 கோடி மதிப்பில் எல்லைச் சுவர் கட்டும் பணியும் ஏற்கெனவே உள்ள முனையக் கட்டடத்தில் ரூ.14 கோடி செலவில் மாற்றங்கள் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டப் பணி கடந்த 2023ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகளைக் கையாளும் புதிய முனையம் ஒன்று திறக்கப்பட்டது.

