கொவிட்-19 நோய்த்தொற்றுச் சூழலின் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இன்றிரவு சிறப்பாக நடந்தேறிய தேசிய தினக் கொண்டாட்டத்தை மரினா பே மிதக்கும் மேடையில் 600 பேர் படைத்தனர். வழக்கமாக 2,000க்கும் அதிகமானோர் படைக்கும் இந்த அணிவகுப்பில் இம்முறை படைப்பாளர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் கொண்டாட்டத்திற்கும் குதூகலத்திற்கும் குறைவு இல்லை.
தொழில்நுட்பமும் முப்பரிமாணக் காட்சிகளும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக்கின.
கட்டுப்பாடுகள் காரணமாக மிதக்கும் மேடையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சாலைகளிலும் கூட்டமாகக் கூடி, கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள முடியாத வருத்தத்தை ஈடுகட்டும் வகையில் தொலைக்காட்சியில் ஒளியேறிய சிறப்பு முப்பரிமாணக் காட்சிகள் அமைந்தன.
வழக்கமாக ஏறக்குறைய 25,000 பேர் நிறைந்து காணப்படும் அரங்கில் இம்முறை 1,000 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாண்டின் மற்றொரு சிறப்பு அங்கமாக, மரினா பே மிதக்கும் மேடையைத் தவிர்த்து வேறு நான்கு இடங்களில் இருந்தும் நிகழ்ச்சி அங்கங்களைப் படைத்தனர். முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட அந்த அங்கங்கள் நேரடி நிகழ்ச்சியுடன் இணைக்கப்பட்டன.

