சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 24) மூன்று மணி நேரத்தில் அதிக மழை கொட்டித் தீர்த்தது. பொதுவாக ஆகஸ்ட் மாதம் முழுவதுக்கும் பதிவாகிய மழைநீர் அளவைவிட இது அதிகம் எனப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
தீவில் ஆக அதிக மழைநீர் புக்கிட் பாஞ்சாங் ரோட்டில் உள்ள மழைநீர் சேகரிப்பு நிலையத்தில் பதிவானதாக கழகம் கூறியது. இன்று காலை 7.50 மணி முதல் 10.40 மணி வரை அங்கு 159.8 மில்லி மீட்டர் அளவு மழைநீர் பதிவானது.
தீவின் சில பகுதிகளில் கால்வாய்களிலும் வடிகால்களிலும் நீர்மட்டம் 90 விழுக்காடு கொள்ளவை எட்டியது.
கனமழை காரணமாக அப்பர் புக்கிட் தீமா, உட்லண்ட்ஸ், சன்செட் டிரைவ் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையை கழகம் விடுத்தது.
டன்யர்ன் சாலையின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகனமோட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

